×

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு.. இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருக்கு ஜாமீன் இல்லை: ஐகோர்ட் அதிரடி

மதுரை: சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆய்வாளர் ஸ்ரீதர் தனக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் கடந்த 2020ல் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட வியாபாரிகளான ஜெயராஜ், இவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் தாக்கப்பட்டதில் உயிரிழந்தனர்.

இவ்வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ஸ்ரீதர், எஸ்ஐக்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், ஏட்டு முருகன், சாமத்துரை, காவலர்கள் முத்துராஜா, செல்லத்துரை, தாமஸ், பிரான்சிஸ், வெயில்முத்து உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை, மகன் தாக்கப்பட்டு உயிரிழந்த வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

காவல் ஆய்வாளர் ஸ்ரீதருக்கு ஜாமின் வழங்கக்கூடாது என சிபிஐ, அரசுத் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஸ்ரீதருக்கு ஜாமின் வழங்கினால் தற்போது வேகமாக நடந்து வரும் விசாரணையில் பாதிப்பை ஏற்படுத்தும் என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஆய்வாளர் ஜாமின் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். இந்த நிலையில், இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த மதுரை உயர் நீதிமன்ற கிளை ஸ்ரீதரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

The post சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு.. இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருக்கு ஜாமீன் இல்லை: ஐகோர்ட் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Satankulam ,Sreedar ,iCourt Action ,Madurai ,Srithar ,Dinakaran ,
× RELATED இளம்பெண் மாயம்